BREAKING NEWS   Sultan of Selangor strongly condemns the 'immoral' acid attack on Faisal Halim, wants police to conduct a thorough probe  | Sultan of Selangor prays for Faisal Halim's swift recovery and eventual return to Selangor FC | Sultan of Selangor expresses concern over the acid attack on Faisal Halim | Simbahan asid terhadap Faisal Halim: Sultan Selangor kecam sekeras-kerasnya serangan tidak bermoral, mahu polis siasat kejadian ke akar umbi | Sultan Selangor doakan Faisal Halim kembali sihat, dapat teruskan khidmat kepada Selangor FC | 
 சிறப்புச் செய்தி

ALAMAK RAYA LAGI பாடலின் மூலம் எங்களுக்கும் புகழ் - 'சினி டான்ஸ்' தனேஸ்வரி

23/04/2024 01:22 PM

கோலாலம்பூர், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்றைய சூழலில் ஒரு பாடல், காட்சி, வசனம், நகைச்சுவை, இப்படி எதுவாக இருந்தாலும், பரவலாகப் பகிரப்படுவதற்கும் பிரபலமாவதற்கும் சமூக ஊடகங்களே முன்னணி பங்கு வகிக்கின்றது. 

அந்த வரிசையில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு அண்மையில் வெளியீடுக் கண்ட DE FAM குழுவின் ALAMAK RAYA LAGI பாடலும் மலேசியாவை கடந்து உலகளவில் சமூக ஊடகங்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்நிலையில், அப்பாடல் தங்களையும் கவர்ந்து நடனமாட வைத்ததுடன் தங்களின் காணொளிப் பதிவும் இனங்களைக் கடந்து தற்போது வலம் வந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார் சினி டான்ஸ் நடனப் பள்ளியின் தோற்றுநர் தனேஸ்வரி ராஜேந்திரன். 

2019-ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு நோன்புப் பெருநாளுக்கும் பிரபல மலாய் பாடல்களைத் தேர்ந்தெடுத்து தாம் தமது குழுவுடன் இணைந்து நடனமாடி அக்காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்ததாக தனேஸ்வரி தெரிவித்தார். 

அதுபோலவே, இவ்வாண்டும் இம்முயற்சியை மேற்கொண்டதாகக் கூறிய அவர் தங்களின் இந்த காணொளிக்கு மக்களிடமிருந்து, குறிப்பாக மலாய் இனத்தவரிடமிருந்து கிடைத்த மாபெரும் வரவேற்பை தாங்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்று விமான நிர்வாகத் துறை  பட்டதாரியுமான அவர் குறிப்பிட்டார். 

''எதிர்ப்பார்க்காமல் செய்த ஒன்றுதான் இது. ஏனெனில், இதனை கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் செய்துதான் வருகிறோம். எனினும், இது மாதிரியான ஒரு வரவேற்பு எங்களுக்கு இதுவரை கிடைத்ததில்லை,'' என்றார் அவர்.

சுமார் 11 இந்தியப் பெண்கள், பாஜூ கூருங், பாஜூ கெபாயா போன்ற மலாய் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு நடனமாடும் இக்காணொளி ஒளிப்பதிவை நிறைவுச் செய்ய தங்களுக்கு ஆறு மணி நேரம் தேவைப்பட்டதாகவும் தனேஸ்வரி தெரிவித்தார். 

புகழும், நேர்மறை கருத்துகளும் அதிகமாகக் கிடைத்தாலும் கூட, தங்களின் இம்முயற்சியை விமர்சிப்பதற்கும் சிலர் இருப்பதை அவர் மறுக்கவில்லை.

''முயற்சி ஏதும் இல்லாமலேயே தற்போது சமூக ஊடகங்களின் மூலம் எளிதாக பிரபலம் அடைந்து விடுகின்றனர் என்று கூறும் தரப்பினரும் இருக்கவே செய்கின்றனர். ஆனால், நாங்கள் பல ஆண்டுகளாக இம்முயற்சியை மேற்கொண்டு வருவது அவர்களுக்கு தெரியவில்லை. அதில் நடனமாடும் பெண்களும் பயிற்சி பெற்றவர்கள்தான். யாரும் வெறுமனே வந்து நடனமாடவில்லை,'' என்று அவர் தெளிவுப்படுத்தினார்.]

இதனிடையே, நவீன இந்திய நடனத்தை தமது சினி dance நடனப் பள்ளியில் மாணவர்களுக்கு கற்றுத் தருவதாகக் கூறிய தனேஸ்வரி நான்கு வயது தொடங்கி 50 வயதிற்குட்பட்டவர்களை மாணவர்களாகச் சேர்த்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். 

அதுமட்டுமின்றி, பிகினர் எனப்படும் தொடக்கநிலை, இண்டர்மெடியேட் எனப்படும் இடைநிலை என இரு பிரிவுகளில் மாணவர்களின் பதிவு நடைபெறும் என்றும் சான்றளிக்கப்பட்ட மலாய் நடனக் கலைஞருமான அவர் விவரித்தார். 

''அனுபவம் இல்லாதவர்கள் தொடக்கநிலை வகுப்பிலிருந்தும்; அடிப்படை நடனம் தெரிந்தவர்கள் இடைநிலை வகுப்பிலிருந்தும் தொடங்குவர்,'' என்றார் அவர்.

நடனம் உட்பட எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஆளுமை பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அத்துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதில் உள்ள நுணுக்கங்களை விடாமுயற்சியுடன் கற்றறிந்து வெற்றிப் பெற வேண்டும் என்று தனேஸ்வரி வலியுறுத்தினார். 

பெர்னாமா தமிழ்ச் செய்திகளுக்காக வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]